9 ஆக., 2013

மரங்களில்தான் விளம்பரம் செய்யணுமா ?...

வெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும். எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா(?) என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன. இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும் அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’ இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது?

ஒருபுறம், மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம்! ‘சேவ் ட்ரீஸ்’ என பல்வேறு வழிகளில் மரம் வளர்ப்பையும், மரங்களின் தேவையும் அரசும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர், பத்தாயிரம் மரங்களை வளர்த்துள்ளனர், ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் பல மரங்களை வளர்த்து பாதுகாத்து வருகிறார் என பல செய்திகளை தினமும் செய்திகள் வழியாக கேள்விப்பட்டு வருகிறோம். நாமோ! இருக்கும் மரத்தையே பாதுகாக்க மாட்டோம், அதுக்கு தண்ணீர் ஊற்றக் கூட மற(று)க்கும் மனநிலையில் உள்ள சுயநலம் பேணும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இத்தனைக்கு இடையிலும் தங்களின் சுயநலத்தோடு, சுயலாபத்திற்காக மரங்களைப் பயன்படுத்தும் போக்கு இன்று பெருகிவருகிறது. தங்கள் அங்காடிகளின், நிறுவனங்களின் வர்த்தக விளம்பரப் பதாகைகளை மரங்களில் தொங்கவிடுவது புதிய பண்பாடாகப் நம்மிடையே வளர்ந்து வருகிறது. கிடைக்கும் இடங்களையெல்லாம் விளம்பரங்களுக்கு பயன்படுத்துவது இன்றைய வர்த்தகப் பொருளாதார யுகத்தில் புதிய விளம்பரத் தொழில் யுக்தி. மக்களிடம் தங்கள் விளம்பரங்களைக் கொண்டு சேர்க்க எத்தனையோ வசதிகள் இருந்தாலும், பணத்தை மிச்சப்படுத்தும் இந்த ‘மரங்களில் விளம்பர பதாகை’ முறையை சிலர் கையில் எடுக்கின்றனர்.
புதிதாக மரங்களை வளர்க்க இடங்கள் கிடைக்காத இன்றைய சூழ்நிலையில், இருக்கும் மரங்களையாவது பாதுகாப்பது நமது அனைவரின் கடமை. மரங்களில் விளம்பர பதாகைகளைத் தொங்கவிடும் முறையில், மரங்களில் ஆணி அடிப்பதன் மூலம் ஆணியில் உள்ள துரு மரத்தின் தண்டிற்குள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகிறது. மேலும், மரத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆணி அடிப்பதன் மூலம், மரத்தினுடைய தண்டு வழியாகச் செல்லும் நீர் தடைபடுகிறது. நீரின் பாதையில் ஆணியில் உள்ள ‘இரும்புச் சத்து (துரு)’ உள்புகுந்து மரத்தின் உயிர்சக்தி (வளர்ச்சி) பாதிப்படைந்து,  நாளடைவில் மரங்கள் காய்ந்து பயனற்றுப் போகும்.
சாலையோரகளில் நின்று கொண்டிருக்கும் அந்த மரங்களும் கூட இல்லையென்றால், இன்று நாம் எங்குதான் நிழலுக்காக ஒதுங்குவது, இருசக்கர வாகனங்களை எங்கே நிறுத்துவது, சாலையோரமுள்ள மரத்தடி கடைகளின் நிலை, இதற்கெல்லாம் மேல் எப்பொழுதாவது பெய்யும் அந்த மழை... இவற்றையெல்லாம் நாம் யோசித்தே ஆக வேண்டும். அனைத்தையும் அரசே பாதுகாக்க வேண்டும், அரசே செய்ய வேண்டும் என கூறிக் கொண்டு அரசின் மேல் பழி போடுவது முதுகெலும்பற்றவர்களின் செயல். நம்முடைய சொந்த வளர்ச்சிக்காக ஒரு மரத்தின் வளர்ச்சியை பாதிப்படைய செய்வது எவ்வகையில் சரியானது. நம்முடைய தொழில் வளர்ச்சியால் நமது ஒருவரது குடும்பம் வளர்ச்சியடையும். அதேசமயம் ஒரு மரத்தின் வளர்ச்சி பலருடைய வாழ்வின் வளர்ச்சியை உயர்த்தும்.
மரங்களைப் பாதுகாக்க அரசும், சில அமைப்புகளும் இருக்கின்றன, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் நமது வாழ்வின் முன்னேற்றத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்போம் என்று இருந்துவிட்டால். நமது வருங்கால தலைமுறையினர் மரங்களை மட்டுமில்லை... மழை, ஏரி, ஆறு, அருவி போன்றவைகளை இன்றைய விளம்பரப் பதாகைகளைப் போல, நமது இல்லங்களில் அழகாகத் தொங்கவிட்டு பார்த்துக் கொள்ளகூடிய சூழல் விரைவில் உருவாகும். பல்வேறு சுப நிகழ்ச்சிகளில், கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் அளித்து வருவது நாம் அறிந்த செய்தியே. ஆனால், நாம் அந்த மரக்கன்றுகளை சரியாக பயன்படுத்துகிறோமோ(?) என்ற கேள்வியின் பதிலுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
புவியின் அசுர வேக தட்பவெப்ப மாறுதல்களுக்கான காரணங்களில், மரங்களின் பங்களிப்பு குறைவானதே மிக முக்கிய காரணமென்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விஞ்ஞானிகள் மட்டுமில்லை எல்லோரும் அறியும் வண்ணம் இன்று பருவகால நிலைகள் மாறிவருகின்றது. இந்தச் சூழலை மாற்றியமைக்க மரங்களால் மட்டுமே முடியும். மரங்களைப் பாதுகாப்பதற்க்கு முன் அவற்றின் தேவைகளை உணரத் தொடங்குவோம். மரங்களை நேசிக்கக் கற்றுக்கொள்வோம். எந்த ஒரு செயலையும் நேசிக்காமல் அதை பாதுகாப்பது என்பது பசியில்லாமல் சாப்பிடுவதுற்குச் சமம். விளம்பரங்களுக்கு மரங்களைப் பயன்படுத்தாமல், மரங்களை வளர்க்க விளம்பரங்களைப் பயன்படுத்துவோம்.
முக்கிய குறிப்பு:
உலகின் மிகப்பழமையான மரங்களின் பட்டியலைக் காண... கீழே உள்ள இணைப்பில் காணலாம்.
உலகின் மிக பழமையான மரம்...2000 வருடங்கள் பழமையான இந்த மரம் தென்னாபிரிக்காவில் காணபடுகிறது! சுட்டி –  http://imgur.com/gallery/hlQI0
மெக்சிகோவில் உள்ள 2000 வருடங்களுக்கு பழமையான மரத்தைக் காணவும்.

1 கருத்து: