5 ஏப்., 2016

தேவன்குறிச்சியில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள்

திருமங்கலத்திற்கு அருகிலுள்ள தே.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் உள்ளது தேவன்குறிச்சி சிற்றூர். இங்குள்ள மலைக்கு அருகில் உள்ள அக்னீஸ்வரர் - கோமதியம்மன் கோவிலில் கி.பி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சில உள்ளன. இதில் இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை.

6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளை இணையதளம் மூலமாக  படித்து அறிந்துக்கொண்ட பின் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்  அதிகமானது. 
நண்பர்களுடன் தேவன்குறிச்சிக்கு சென்ற வாரம் சென்று வந்தேன். காலை வேளையில் சென்றால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் 6 மணியளவில் இருசக்கர வாகனங்களில் புறப்பட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை. வழியெங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருந்தது. சிறு குளங்களிலெல்லாம் நீர் நிறைந்து காணபட்டது. குளங்களில் சாம்பல் நாரை, நத்தைகொத்தி, வெண் கொக்கு, மீன்கொத்தி, பனங்காடை, கரிச்சான்குருவி என பறவைகள் நிறைந்திருந்தன.