மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும்
சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர் நோக்கிச் செல்லும் சாலையில் உதயகிரி
என்னும் சிறுகுன்று உள்ளது. இக்குன்றின் கிழக்குதிசையில் உதயகிரீஸ்வர் என்னும் குடைவரை
கோயிலும் குன்றின் பின்புறம் மேற்குதிசையில் அஸ்தகிரீஸ்வர் என்னும் குடைவரை கோவிலும்
அமைந்துள்ளது. குன்றின் வடக்கு திசையில் மிகப்பெரிய இயற்கையான முறையில் அமைந்த குகையில் தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் மற்றும் கற்படுக்கைகள் அமைந்துள்ளன. எண்ணளவு குறித்த கல்வெட்டு
இம்மலை குகைத்தள முகப்பில் காணப்படுவது இக்குன்றின் சிறப்பு.
சென்றவாரம் நண்பர்களோடு இக்குடைவரை கோயிலுக்கு சென்று
வந்தேன். பயணம் அதிகாலையில் திருமங்கலம், சுங்குராம்பட்டி, வழியாக பழைய விமானநிலையம்
சாலையில் சென்றது. இளஞ்சிவப்பு நிறத்தோடு கதிரவன் முகம் காட்டினான். பறவைகள் உணவிற்கான
தங்களின் தேடலைத் துவங்கியிருந்து அவைகளோடு நாங்களும் இணைந்து கொண்டோம். வழியெங்கும்
மிதமான பனியும் பறவைகளின் ரீங்காரமும் நிறைந்திருந்தது.
வழியில் கண்ட சில கிராமங்களில் பசுமை நிறைந்து இருப்பதைக் காணமுடிந்தது.
