25 ஜூலை, 2015

பராங்குசப் பேரேரியும் ஏழு கண் மடையும்...

இராசபாளையத்தில் ஜூலை 18,19களில் தமிழக தொல்லியல் கழகத்தின் 25ம் ஆண்டுக் கருத்தரங்கு மற்றும் 26வது ’ஆவணம்’ இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவை மதுரையில் செயல்பட்டு வரும் ‘பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்’ ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் மற்றும் இலங்கையிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்களுடைய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், நிழற்ப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

19 ஜூலை, 2015

குத்தால அருவியிலே குளித்தது போல் இருக்குதா...

சரியாக சூன், சூலை மாதங்களில் குற்றால சீசன் தொடங்கிவிடும். ஆகஸ்ட் மாதம் வரை சீசன் குறையாது. தற்போது பருவகால மாற்றங்கள், மழை பெய்யா எனக் குற்றாலத்தில் நீர் வருவதை காண மக்கள் எந்நேரமும் காத்துகிடக்க வேண்டியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மழை பெய்துவிட்டால் குற்றாலத்தைச் சுற்றி உள்ளவர்களுக்கு கொண்டாட்டந்தான். அவர்களுக்குத்தான் முதலில் செய்தி கிடைக்கும் என்பதால் குற்றாலக் குளியல் அவர்களுக்குத்தான் முதல்வசம். பின் அங்கிருந்து செய்தி பரவி வெளியூர் மக்களுக்குச் சென்றடையும்.

28 ஜூன், 2015

திருப்பரங்குன்றம் அமன்பாழி கற்படுகைகள்...

சென்ற வாரம் காலையில் திருப்பரங்குன்றம் வரை நானும் நண்பரும் சென்றிருந்தோம். திருப்பரங்குன்றம் மதுரையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் மதுரை – திருமங்கலம் சாலையில் அமைந்துள்ளது. மலையின் மேற்குப் பகுதியில் தொடர்வண்டி நிலையத்திற்கு எதிரில் மலையில் இயற்கையாக அமைந்த குகைத்த தளம், சமணத்துறவிகள் தங்குவதற்கு வெட்டப்பட்ட கற்படுக்கைகள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் என பல வரலாற்றுத் தகவல்களை இம்மலை தன்னகத்தே கொண்டுள்ளது. திருப்பரங்குன்ற மலையைச் சுற்றி வரும் வழியில் தென்பரங்குன்றத்தில் குடைவரைக்கோயில் ஒன்றுள்ளது. இவை அனைத்தையும் கண்டுவர வேண்டும் எனச் சென்றிருந்தோம். தொன்மையான வரலாற்றுச் செய்திகளைக் காண பயணத்தோம்.

தென்பரங்குன்றம் குடைவரைக் கோயில்.

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி செல்லும் சாலையில், சாலையின் இடது புறத்தில் குடைவரைக்கு செல்லும் வழிக் காணப்பட்டது. குடைவரைக்குச் செல்லும் வழியில் பூங்கா ஒன்று  அழகாக காணப்பட்டது. நாங்கள் சென்ற நேரம் பூங்காவில் ஆங்காங்கே காதலர்கள் அமர்ந்திருந்தனர். மலையில் குடைவரைச் சற்று உயரத்தில் காணப்பட்டது. மேலே செல்வதற்கு வசதியாக படிகள் செய்து தரப்பட்டிருந்தது.