12 ஜன., 2013

சுயநலத்தின் ஆற்றாமை...

பருவமழை பொய்த்துப்போனது. . .
காவிரியும் பெரியாறும்
தடைபட்டுப்போனது. . .
எங்கள் பயிர்களெல்லாம்
நீரின்றி வாடிப்போனது. . .

இயற்கை வாழ்வை - மறந்து
செயற்கை வாழ்வைத் தேடியதால்
அறுவடை திருநாள் என்பது
எங்களிடம் இருந்து
அறுபட்டு போகுமோ ???

6 ஜன., 2013

குடுமியான்மலையும் மேலக்கோயில் குடைவரையும்...

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் ஏற்பாடு செய்த ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் ‘மூவர் கோயிலுக்கு’ சென்றுவிட்டு, இரண்டாவதாக புதுக்கோட்டை மணப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள குடுமியான்மலைக்குச் சென்றோம். குடுமியான்மலை மணப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
மூவர் கோவிலைப் பார்த்துவிட்டு, குடுமியான்மலை ஊரில் அமைந்துள்ள மலைப்பகுதிக்குச் சென்றோம். வெயில் சற்று கம்மியாக இருந்தது, மலையில் ஏற உதவியாக இருந்தது. மலை மிக அழகாக காட்சி தந்தது. மலையின் தென்புறச் சரிவில் இயற்கையாக அமைந்துள்ள குகைத்தளத்தை நோக்கி அனைவரும் நடந்தோம். மலை சற்று வழுவழுப்பாகவும் சறுக்கலாகவும் இருந்தது. வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆவலில் கவனமாக ஏறினோம். நண்பர்கள் சிலர் ஏற முடியாதவர்களுக்கு உதவி செய்தனர்.

5 ஜன., 2013

கொடும்பாளூர் மூவர்கோயில் கற்றளி...



பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சுற்றியுள்ள சில வரலாற்று இடங்களுக்கு சென்று வந்தோம். அதே போல், இந்த மாதமும் (23.12.2012 ஞாயிற்றுக்கிழமை) மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளூர், குடுமியான்மலை, சித்தன்னவாசல், புதுக்கோட்டை அருங்காட்சியகம் மற்றும் திருமயம் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் வரலாற்று சுற்றுலா பயணமாக சென்று வந்தோம்.

பயணத்தில் முதலாவதாக மதுரை - திருச்சி சாலையில் விராலிமலைக்கு சற்று முன்பாக அமைந்துள்ள கொடும்பாளூர் சத்திரம் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள ‘மூவர் கோயிலுக்கு’ சென்றோம். கொடும்பாளூர் மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மூவர்கோயிலானது கொடும்பாளூர் சத்திரம் சிற்றூருக்கு கிழக்கு பகுதியில் இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

25 நவ., 2012

மேட்டுப்பட்டி சித்தர்மலையும் ’மதிரை’ கல்வெட்டும்...

அதிகாலை – மூடுபனி - குளிர். இப்படியாக கண் விழித்தது இன்றைய விடியல் பொழுது. சாலையெங்கும் லேசான பனி மூடியிருந்தது. இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி நோக்கி நண்பர்களுடன் பயணம். இளம் பனியின் குளுமைக்குள் செல்லும் அதிகாலைப் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இன்றைய பயணம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரணைப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி நோக்கி.
அணைப்பட்டி என்னும் சிற்றூருக்கு அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது. இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன. 2000 வருட பழமையான ஒரு இடத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள சென்றோம். திருமங்கலம் -  செக்காணூரனி – விக்கிரமங்கலம் – பெருமாள்பட்டி வழியாக மேட்டுப்பட்டி நோக்கிச் செல்ல வேண்டும்.