27 ஜூலை, 2013

கழிஞ்சமலை தமிழி கல்வெட்டுகள்...



கழிஞ்சமலைத் தொடரில் பல விதமான பாறைகளின் வித்தியாசமான உருவங்களையும், அவைகளின் புவியியல் அமைப்பையும் கண்டபடியே நடந்து கொண்டிருந்தோம். வழியில் கண்ட சிறுகுன்றின் மீது நிற்கும் ஒரு பாறையின் இந்த காட்சி மீண்டும் மனதைவிட்டு அகலாமல் கல்லாய் நிற்கிறது.

குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு பாறைக்கு அருகே பல மணிகள் இரண்டு கற்தூண்களுக்கு நடுவே கம்பி ஒன்றில் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்த மணிகள் அனைத்தும் மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும். அருகில் தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் ஏதும் காணப்படவில்லை. மலைப் பாறையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருவதாக அருகில் இருந்த சில குடியிருப்பு வாசிகள் கூறினர். இயற்கை சில இடங்களில் தெய்வமாக வழிபடுவதை காணும் பொழுதெல்லாம் மனம் நிறைவு அடைகிறது. கோயில் மணிகளை பார்த்துவிட்டு பின்னர் அருகில் இருந்த குகைத் தளத்திற்கு சென்றோம்.

அரிட்டாபட்டியில் குடைவரை கோயில்...

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி சிற்றூர். இங்கு முற்கால பாண்டியர் காலத்து குடைவரையும், 2000 வருட பழமையான தமிழிக் கல்வெட்டும் உள்ளது. இதனை காண்பதற்காக பசுமைநடைக் குழுவோடு இணைந்து சென்ற வாரம் ஞாயிறு காலை சென்று வந்தேன். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் குழுவினர் சந்திக்கும் இடமாக கூறப்பட்டு இருந்தது. காலை 6.30 மணியளவில் அங்கு சென்றேன். குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் அரிட்டாபட்டி நோக்கிச் சென்றோம். சில நண்பர்கள் தங்களுடைய சிற்றுந்துகளில் எங்களோடு வந்தனர்.