30 நவ., 2013

வைகையில் கரையேறிய திருவேடகம்...

திருவேடகம் என்றாலே தென்னை மரங்கள் தான் நினைவில் நிற்கின்றன. வைகை ஆற்றங்கரையில் தென்னை, வாழை, வெற்றிலை, நெல் என விவசாய நிலங்கள் சூல இயற்கையின் மடியில் திருவேடகம் சிற்றூர் அமைந்துள்ளது. வைகையின் ஆற்றுப் பாசனத்தால் இப்பகுதியை எங்கு நோக்கிலும் செழிமை நிறைந்து காணபடுகிறது. திருவேடகம் ஏடகநாதர் கோயில் மற்றும் வைகையின் சிறப்பை அறிந்துகொள்ளவும் பசுமை நடை குழுவினரோடு ஞாயிறு அதிகாலை எங்கள் ஊர் நண்பர்களுடன் சேர்ந்து சென்று வந்தேன்.  மேலக்காலை அடுத்த வைகை ஆற்றங்கரையில் ஓங்கி வளர்ந்து நின்றிருந்தது தென்னை மரங்கள். கார்த்திகை மாத அதிகாலை மூடுபனியில் கதிரவன் மெல்ல வானில் வந்தான். இளமஞ்சள் நிற வானில் ஓவியமாய் தென்னை மரங்கள் அசைந்து கொண்டிருந்தன.