9 பிப்., 2014

அன்பின் வழியது உயிர்நிலை...


410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை. அந்த மழைதான் பூமியில் பெருங்கடல்களை உற்பத்தி செய்தது. அந்த பெருங்கடலில்தான் பூமியின் முதல் உயிரிகள் தோன்றின.
                                                                                                                                 - . செந்தமிழன்

உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் இப்பூவுலகில் பிறந்தன. ஒவ்வொரு உயிர்களும் தத்தம் வாழ்வினை மிக அழகாக வாழ்ந்து வருகின்றன. மனிதர்களின் வாழ்வை போல் எந்தவித எதிர்பார்ப்பையும் கொண்டில்லாமல் சுதந்திரமாக தங்களது வாழ்வை கொண்டுள்ளன. மனிதனுக்கு மட்டும் தான் இவ்வுலகம் என்ற கொள்கையோடு தற்போதைய மனிதச்சமூகம் வளர்ந்துவருகிறது. எவ்வளவு இடத்தை தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டு, அதற்குள் வேறு எவரையும் நுழையவிடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
கடலில் வாழும் மீன்கள் தங்களுக்குள் எல்லையை வகுத்துக்கொண்டு வாழ்வதில்லை. பறவைகள் தட்பவெப்பச் சூழல், காலநிலைக்கேற்றவாறு கண்டம் விட்டு கண்டம் வந்து செல்கின்றன. எந்த பறவைகளுக்கும் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கிடையாது. வரும் பறவைகளை இங்குள்ள பறவைகள் எதிர்பதும் கிடையாது. காட்டில் வாழும் உயிர்கள் நாட்டிற்குள் வருகிறது என்கிறது மனிதச்சமூகம். இவ்வளவு நாள் தொந்தரவு செய்யாத காட்டுயிர்கள் தற்போது ஊருக்குள் வருகிறது என்றால்... காடுகள் சுருங்கி... மனித வாழிடம் விரிந்துள்ளது என்பதுதான் இங்கு உணரப்படுகிறது. மனித சமூகத்தின் நிழலைக்கூட பல்வேறு உயிரினங்கள் விரும்புவதில்லை. எங்கு நம்மை அழித்துவிடுவார்களோ என அஞ்சி. இன்று நம்மை அழிக்க முற்படும் காட்டுயிர்களை நாம் மறைமுகமான ஒருவிதத்தில் அழித்துவருவெதே உண்மை நிலை.

இப்படிபட்ட வாழ்க்கைச் சமூகத்தினூடான பயணத்தில் ஒருநாள் மனிதர்களை தாண்டிய ஒரு உயிரை நம்மால் நேசிக்க முடியுமா ? என்ற கேள்விகூட கனவிலும் இங்கு எழுவதில்லை. சக மனிதர்களையே வெறுக்கும் மனபான்மை இங்கு வளர்ந்து வருகிறது. மனிதர்களின் நிறங்கள் இங்கு வெளுத்து போய் உள்ளது. வெள்ளை நிறத்தை உடையவர்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கருப்பு மனிதர்களுக்கு கிடைப்பதில்லை. மனிதர்களுக்குள்ளேயே இங்கு பல்வேறு முரண்பாடுகள். அவற்றை ஆயுதமாக பயண்படுத்துபவர்கள் ஏராளம்.

மனிதநேயம் என்றொரு வார்த்தையை அவ்வபொழுது பலரும் கேள்விபடுவதுண்டு, ஆனால்... அதனை நடைமுறைக்கு கொண்டுவர யாரும் தயாராக இல்லை. சிறுமிகளும், இளைஞிகளும், பெண்களும் தொடர்ச்சியாக பாலியியல் வன்முறைகளுக்கு ஆளாக்கபடுகின்றனர். சமூகத்தின் வளர்ச்சி இதில்தால் முன்னேற்றம் கண்டுள்ளது. பகைவர்களை (லி)ழிவாங்கும் எண்ணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. பொருள் ஈட்டும் அளவு எவ்வளவு என்பதை வரையறுக்க முடியாத அளவில் மக்கள் அல்லாடி கொண்டிருக்கின்றனர். சமுகத்தில் மற்றவர்கள் முன் உயர்வாக இல்லாவிட்டாலும் சமமாக வாழ வேண்டும் என்ற சூழல் வெகு வேகமாக பரவிவருகிறது. இதற்கெல்லாம் மத்தியில் மனிதநேயம் என்ற வார்த்தை நிமிர்ந்து நிற்க முடியாமல் குறுகி கூனியுள்ளது.

பிற உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்று சுலமாக சொல்லி விடலாம். ஆனால் அதனை எத்தனை பேரால் நடைமுறையில் செய்யமுடிகிறது என்பதே இங்கு கேள்வி. 10 – 15 வருடங்களுக்கு முன் நம் வீடுகளைச் சுற்றிவந்த சிட்டுக்குருவிகளை இப்பொழுது பார்பதே அரிதாகிவிட்டது. விவசாயத் தொழில் நாளுக்கு நாள் குறைந்து வரும் இன்றைய நாட்களில், உணவு சங்கிலியில் இடம் பெற்ற பல்வேறு விலங்குகள், பறவைகள், பூச்சிகளின்  இனங்கள் மாயமாகி உள்ளன.
பார்த்தாலே அறுவருப்பைத் தரும் புழுக்கள் போன்ற பல உயிர்கள் விவசாயத் தொழிலில் எவ்வளவு முக்கியமானவை என்று விவசாயப் பெருமக்களுக்கு மட்டும்தான் தெரியும். நெல் மற்றும் பயறுகள் விளையும் இடங்களில் மயில்களை அதிகம் காணமுடியும். இவைகள் பயறு மற்றும் நெல் மணிகளை உண்பதில்லை அவற்றை தாக்க வரும் பூச்சிகளை உணவாக்கி கொள்கின்றன. சில எறும்பு வகைகள் பயிர்களைத் தாக்கும் புழுக்களை உணவாக கொண்டுள்ளன. இது போன்று பல்வேறு உணவு பாதுகாக்க்கும் வேளையில் காட்டுயிர்கள் ஈடுபடுகின்றன.
வாழ்க்கை சங்கிலித் தொடரில் பல்வேறு உயிர்கள் பங்கு கொள்கின்றன. நாம் அவற்றை பாதுகாக்க முற்படாவிட்டாலும், அவற்றை அறிந்து கொள்ளவாது முயற்சிப்போம். அப்போதுதான் அந்த உயிர்களின் முக்கியத்துவத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். சென்ற மாதம் சென்னையில் ‘பூவுலகின் நண்பர்கள்’ ஒருங்கிணைத்த சுற்றுச்சூழல் காப்போம் நிகழ்வில் காட்டுயிர்களின் ஒளிப் படக்காட்சியை நண்பர்கள் ஏ.சண்முகானந்தம், அருண் நெடுஞ்செழியன், வெங்கடேஷ் லிங்கராஜா, ரமேசு கருப்பையா, கனகராஜ் மற்றும் முருகராஜ் அனைவரும் இணைந்து நடத்தினர். பொதுமக்கள் பலரும் இந்நிழற்படங்களை கண்டு காட்டுயிர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர்.
நண்பர்கள் ஏ.சண்முகானந்தம், அருண் நெடுஞ்செழியன் மற்றும் வெங்கடேஷ் லிங்கராஜா ஆகியோரின் காட்டுயிர் நிழற்படங்கள் ஒளிப்படக்காட்சிகளில் இடம்பெற்று இருந்தன. ஒளிப்படக் கண்காட்சி நிகழ்வுகளையும், நண்பர்களின் நிழற்படங்கள் சிலவற்றையும் இங்கு இணைத்துள்ளேன். காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நற்காரியத்திற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம். அனைத்து உயிர்களை நேசிப்போம். 

1 கருத்து: